சென்னை கிண்டியில் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள்... முடங்கிய போக்குவரத்தால் போலீஸ் திணறல்!
நீட் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையின் பிரதான சாலையான கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.
சென்னை : அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வுக்கு தடை கோரியும் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
அரியலூரை மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்து போனதையடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவிற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஸ்தம்பிப்பு
கடந்த 3 நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நந்தனம் மாணவர்கள்
இந்நிலையில் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே நந்தனம் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் சில மாணவர்களே திரண்ட நிலையில் திடீரென நூற்றுக்கணக்கான மாணவர்கள் மேம்பாலம் அருகே திரண்டதால் போக்குவரத்து முடங்கியது.
போக்குவரத்து முடங்கியது
மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய முயற்சித்தனர். எனினும் ஏராளமான மாணவர்கள் குவிந்ததால் போக்குவரத்து உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் புறநகர்ப் பகுதிகளில் இருந்து சென்னைக்குள் வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.
மாணவர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று மாணவர்கள் விடாப்படியாக இருந்ததால் போலீசார் திணறினர். இதையடுத்து மாணவர்களை கைது செய்து போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.