அடுத்தடுத்து அசத்தும் சென்னை கமிஷனர்.. எஸ்.ஐயால் கை உடைக்கப்பட்ட இளைஞருக்கு நேரில் ஆறுதல்!
சப்-இன்ஸ்பெக்டரால் கை உடைந்த மாணவரை நேரில் சந்தித்து பேசினார் சென்னை கமிஷனர்.
Recommended Video
சென்னை: கமிஷனர் விஸ்வநாதன் சென்னை மக்களிடம் ஒரு ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறார். சமீபத்தில்கூட அண்ணாநகரில் திருடனை விரட்டி பிடித்த சிறுவன் சூர்யாவுவை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அச்சிறுவன் ஆசைப்பட்டபடி டிவிஎஸ் கம்பெனியில் ஒரு வேலையும் வாங்கி கொடுத்தார். இதற்காக நற்செயலுக்கான உயர்ந்த பண்புக்காக அவருக்கு பல தரப்பில் வாழ்த்துக்கள் குவிந்தது. தற்போது அதேபோல மற்றொரு சம்பவத்திலும் கமிஷனர் தன்னுடைய மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி உள்ளார். அந்த சம்பவம்தான் இது.
சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா, மாணவரை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காட்டியதாக தெரிகிறது.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவணம்தான் வேண்டும் என்று கேட்டுள்ளார். அசல் இல்லை என்று தெரிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தகராறாக மாறியது. ஒருகட்டத்தில் முகமது ஆரூணை சப்-இன்ஸ்பெக்டர் லத்தியால் சரமாரியாக தாக்கியதுடன், அவரது கையையும் முறித்துவிட்டார். இதில் மாணவனின் கையை உடைந்தது. தன் மகனுக்கு கை உடைந்துவிட்டதை அறிந்த மாணவனின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததுடன் நள்ளிரவு என்றும் பாராமல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மறுநாள், இந்த சம்பவம் குறித்து மாணவர் முகமது ஆருண், முதலமைச்சர், சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளித்தார்.
அப்போதுதான் சம்பவத்தின் தீவிரம் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தெரியவந்தது. சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜாவின் இந்த நடவடிக்கையினால் கடும் கோபம் அடைந்த கமிஷனர், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தற்போது, கை உடைந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாணவர் முகமது ஆரூண் சேட்டின் சூளைமேட்டில் உள்ள வீட்டுக்கே சென்றுவிட்டார் கமிஷனர். மாணவனை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவரது உடல்நலன் குறித்தும் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார்.
தன் துறை சம்பந்தப்பட்டவர் தவறு செய்தார் என்று தெரிந்தும், உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்தார் கமிஷனர் விஸ்வநாதன். இது துறை ரீதியான செயல். பின்னர், பாதிக்கப்பட்ட ஒரு மாணவனை வீடு தேடி ஆறுதல் சொல்வது அவரது மனிதாபிமானமிக்க செயல். துறை, மற்றும் மனிதாபிமானம் கலந்த கமிஷனரின் இதுபோன்ற நல்லியல்புகளை பிற காவல்துறை அதிகாரிகளும், தமிழக போலீசாரும் ஒரு பாடமாகவும், முன்னுதாரணமாகவும் எடுத்துக் கொண்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.