859 பகுதிகள்.. நாங்க ரெடி.. வரட்டும் வெள்ளம்.. காத்திருக்கிறது "கார்ப்பரேஷன்"!
சென்னையில் வரும் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் 859 பகுதிகளை மாநகராட்சி அடையாளம் கண்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாம்.
சென்னை: சென்னையில் கன மழை பெய்தால் வெள்ளம் பாதிக்கக் கூடிய மற்றும் வெள்ள நீர் அதிக அளவில் சூழக் கூடிய 859 பகுதிகளை சென்னை மாநகராட்சி அடையாளம் கண்டு அங்கு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆயத்த நிலையில் வைத்துள்ளதாம்.
வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் இப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உரிய முறையில் சமாளிக்க முடியும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்கள் கிட்டத்தட்ட முக்கால்வாசி சரி செய்யப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மறக்க முடியாத மழை வெள்ளம்
கடந்த ஆண்டு சென்னை சந்தித்த பெரும் மழையும், பேய் வெள்ளமும் மறக்க முடியாத அளவுக்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு அதே மாதிரியான சூழல் ஏற்படாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் குதித்துள்ளனர்.
பாதிக்கும் பகுதிகளின் லிஸ்ட்
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் அடிப்படையில் எங்கெல்லாம் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பதை பட்டியலிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
859 பகுதிகள்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 859 பகுதிகளில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாம். அதில் 306 இடங்களில் மிகப் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மழை நீர் கால்வாய்கள்
சென்னை நகரில் உள்ள 7351 மழை நீர்க் கால்வாய்களில் 5311 கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளதாம். இதற்காக ரூ. 18 கோடி செலவிடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் கணக்குக் காட்டியுள்ளனர்.
சுரங்கப் பாதைகள்
சென்னை மாநகராட்சி வசம் 16 சப்வேக்கள் அதாவது சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் தண்ணீர் தேங்கும்போது அதை உறிஞ்சி எடுக்க 38 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனவாம். 13 சப்வேக்களில் சுவரை உயர்த்திக் கட்டி மழை நீர் தேங்காமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
42 மீட்புப் படைகள்
மழைக்காலம் தொடங்கியதும் 42 மீட்புப் படைகள் ஆயத்த நிலையில் வைக்கப்படுமாம். மேலும் 103 இயந்திரப் படகுகளும் தயார் நிலையில் இருக்குமாம். அதுதவிர 156 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்படும். நான்கு சமையலறைகள் ஏற்படுத்தப்பட்டு உணவு சமைத்து விநியோகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இதுவிர மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.