பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை மாநகராட்சி.. உதவி எண் அறிவிப்பு!
சென்னை: பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மழை, வெள்ள பாதிப்பை சமாளிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது..
கடந்த டிசம்பர் மாதம், கன மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. பலர் பாதிக்கப்பட்டு, வீடு உடமைகளை இழந்தனர். அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இன்று கேரளாவில் கால் பதித்துள்ளது. அடுத்த சில நாட்களில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தாக்கம் இருக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநகராட்சி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மழை வெள்ள பாதிப்பு குறித்த புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
தேங்கும் நீரை அகற்ற, 600 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாயும் மரங்களை அகற்ற தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. 15 ஆயிரம் ஊழியர்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.