சென்னை மாநகராட்சி செயலிழந்து கிடக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசிடம் இதுவரை தமிழக அரசு நிதி கேட்காதது ஏன் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், மகாத்மா காந்தி நகர், ராஜீவ் காந்தி நகர் மற்றும் அன்னை சத்யா நகர் பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
கடந்த 15 நாட்களாக மழை பெய்கிறது. ஆனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் தமிழக அரசு இன்னும் எடுக்கவில்லை. குறிப்பாக சென்னை மாநகர மேயர் சைதை.துரைசாமியை போகிற இடமெல்லாம் மக்கள் சூழ்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். அதே போன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை பொதுமக்களே முற்றுகையிட்டு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் ஆறு அமைச்சர்கள் கடலூரில் முகாமிட்டு வெறும் ஆய்வு கூட்டங்களை நடத்துகிற மாதிரி ஒரு பாவனை பண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர, முழுமையான நிவாரண பணி ஏதும் நடைபெறவில்லை என்பது தான் கடலூரில் உள்ள நிலைமை.
இன்றைக்கு மத்திய அமைச்சராக இருக்க கூடிய நிர்மலா சீதாராமன் அவர்கள் பல பகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறார். மக்கள் அவர்களிடத்திலும் முறையிட்டுள்ளார்கள். மாநில அரசு, மத்திய அரசுக்கு இதுவரை இந்த மழையைப் பற்றியோ, மழை சேதங்களுக்கான நிவாரணங்கள் கேட்டோ எந்தவித ஆய்வு அறிக்கையும் கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். கடந்த 19 -ஆம் தேதி தான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் பேசி நிவாரணப் பகுதிகளை பார்வையிட குழு அனுப்புமாறு கேட்டிருக்கிறார். அப்போது கூட பிரதமரிடம் பேசி வெள்ள சேதங்களுக்காக நிதி கேட்கவில்லை.
கலைஞர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது போல, மழையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 5 ஆயிரமும், இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் 10-லட்சமும் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும். நிவாரண தொகை வழங்குவதற்கென்று, ஒரு தனி குழு அமைக்க வேண்டும். அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் அதிலே இடம் பெற வேண்டும். அந்த குழுவின் மூலமாக தான் நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டும் . அப்படி நடந்தால் அது முறையாக மக்களுக்குப் போய் சேரும்.
இல்லையென்றால், தேர்தலுக்காக அவர்கள் இதை பயன்படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலை நிச்சயமாக உருவாகும். சென்னையில் மாநகராட்சி செயல் இழந்து கிடக்கிறது. அதனால் தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், நாங்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.