அபாயகரமான நிலையில் 2,300 கட்டிடங்கள் - இடித்துத் தள்ள சென்னை மாநகராட்சி உத்தரவு!
சென்னை: சென்னையில் இடியும் நிலையிலுள்ள 2,300 கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் பழமையான கட்டடம் ஒன்று கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது. இதனையடுத்து, சென்னையில் உள்ள பழமையான கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை மாநகாட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அதன் படி, பாரீஸ், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய இடங்களில் இடிந்து விழும் நிலையில், பழமையான கட்டடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பழமையான, இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டு மாநகராட்சி சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொருட்சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி மதுரை ரோட்டில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் ஒரு பழமையான 3 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் 3 ஆவது மாடியில் வசித்து வந்த பஷீர் அகமது என்பவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானார். இதில் அக்கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே சென்னையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பழமையான கட்டிடங்களை இடித்துத் தள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.