கடலை போட கடற்கரைக்கு செல்லும் காதலர்களே! இனி மெரினாவில் வாகனங்களுக்கு கட்டணமாம்!
சென்னை: சென்னை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் வாகனங்களை நிறுத்த இனி கட்டணம் வசூலிக்கலாம் என மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையின் முக்கிய அடையாளம் என்றால் அது கடற்கரைகள்தான். இங்கு நகரத்தில் மெரினா மற்றும் எலியட்ஸ் ஆகிய இரு கடற்கரைகள் உள்ளன. கோடை காலங்களில் மக்கள் தங்கள் பொழுதை போக்க பெரிதும் உதவுகின்றன.
அத்துடன் குழந்தைகள் விரும்பும் இடமாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் காதலர்கள் தங்கள் காதலை வளர்க்கவும் (அட கள்ளக்காதல் கூட தாங்க) இந்த கடற்கரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் பெரும்பாலான கூட்டம் மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் கூடுவதால் வாகனங்கள் மணிக்கணக்கில் விடப்படுவதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வாகனங்களுக்கு கட்டணங்களை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு மணி நேரத்துக்கு அங்கு நிறுத்தப்படும் காருக்கு ரூ.20 என்றும் பைக்கிற்கு ரூ. 5 என்றும் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இனி கடலை வாங்கும் காசை பார்க்கிங்கிற்காக கொடுத்துவிட வேண்டியதுதான் போல.