சென்னையில் 9 இடங்களில் சரவண பவன் ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு- மாநகராட்சி அதிரடி!!
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை உள்பட 9 சரவண பவன் ஹோட்டல்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.
சென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஹோட்டல் உள்பட அதன் 9 கிளைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கேகே நகரில் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சரவண பவன் ஹோட்டல். தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது சரவண பவன் ஹோட்டல்.
இதன் உரிமையாளர் ராஜகோபால் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2வது, 3வது திருமண விவகாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். கொலை வழக்கிலும் சிறைக்கும் போயிருந்தார். இருந்தபோதும் இந்த சர்ச்சைகளால் அவரது ஹோட்டல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
வழக்கம் போல சரவண பவன் ஹோட்டல் கொடி கட்டிப் பறந்தது. இந்த நிலையில் இன்று திடீரென சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்து இழுத்து மூடினர். அதேபோல் சரவணபவன் ஹோட்டலுக்கு சொந்தமான 9 கிளை ஹோட்டல்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒரே நேரத்தில் சரவண பவன் ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.