சென்னை சிட்டி முழுவதும் சிசிடிவி கேமராக்கள்.. இனி குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவிருப்பதாக காவல் துறை கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை: சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவிருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்தது.
சென்னை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலும் குற்றங்கள் நடைபெறும் போது அதை செய்த குற்றவாளிகளை பிடிக்க பெரிதும் உதவுவது சிசிடிவி கேமிராக்கள்தான். அவற்றின் மூலம் கொலை, கொள்ளை, நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் துப்பு கிடைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுழள்ளனர்.
அதனால் காவல் துறையும் அனைத்து வீடுகளிலும் கேமராக்களை பொருத்த அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னை புதுப்பேட்டையில் 48 கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் இன்று திறக்கப்பட்டன. அதை சென்னை காவல் துறை கமிஷனர் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், சிசிடிவி கேமராக்களால் குற்றங்கள் குறைந்து வருகின்றன. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளன.
குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் காவல் துறை கமிஷனர்.