மின்சாரம் தாக்கியதால் பயந்து ஓடிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள் !
சென்னை புளியந்தோப்பில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் மின்சாரம் தாக்கியதால் பயந்து ஓடினர்.
சென்னை: சென்னை புளியந்தோப்பில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் மின்சாரம் தாக்கியதால் பயந்து ஓடினர். சாலையில் இருந்த தண்ணீரை அகற்றுவதற்காக மின் மோட்டார்களை உபயோகித்த போது அவர்களை மின்சாரம் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது. இதனால் போக்குவரத்து பெரிய ளவில் பாதித்து இருக்கிறது. மேலும் பல இடங்களில் மின்சார கம்பிகள் தண்ணீரில் விழுந்து கிடக்கிறது.
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான புளியந்தோப்பில் தேங்கிய இருந்த தண்ணீரை அகற்றும் பணியில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் செயல்பட்டனர். அப்போது 3 அடி உயரம் இருந்த நீர் இரைக்கும் மோட்டரை தண்ணீரில் வைத்து நீரை வெளியேற்ற முயன்றனர். அப்போது அவர்களை மின்சாரம் தாக்கி இருக்கிறது.
இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தண்ணீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களே மின் கம்பிகளால் பாதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.