பண மோசடி... வேந்தர் மூவீஸ் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: பண மோசடி வழக்கில் வேந்தர் மூவீஸ் மதனுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது.
தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பலரிடம் 84 கோடியே 24 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
காசியில் கங்கை நதியில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி தலைமறைவான மதனை பல மாதங்களாகத் தேடி திருப்பூர் அருகே போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு, இந்த வழக்கில் மதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாகக் கூறி பெற்ற பணத்தை மதன், ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினர் தனி வழக்குப் பதிவு செய்து மதனை கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதன், சென்னை 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருள்முருகன், மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.