ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு.. டிராபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்தாக தொடரப்பட்ட வழக்கில் சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்டு பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி நபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும்
வெளிமாநிலங்களில் இருந்து வந்த நிவாரண பொருட்களில் வழங்கபட்டது.
இவ்வாறு பெறப்பட்ட நிவாரண பொருள்களை அ.தி.மு.க.வினர் பறிப்பதாக கூற்றம்சாட்டி அப்போதைய முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பேசிய வீடியோ பதிவு வாட்ஸ் ஆப்பில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறி டிராபிக் ராமசாமிக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே டிராபிக் ராமசாமிக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு இன்று நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டதால் புதிதாக வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.