ஆவின் முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட விவகாரம் : விஜயகாந்திற்கு கோர்ட் சம்மன்
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 21ம் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
நாட்டையே உலுக்கிய ஆவின் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்தார். இத்தகவல் ஊடகங்களிலும் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, விஜயகாந்தின் இந்த பேட்டி தமிழக அரசின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா சார்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப் பட்டது.
அதில், ஆவின் பால் விலை ஏற்றத்துக்கு முன்பு கொள்முதல் அளவு 20.64 லட்சம் லிட்டராக இருந்தது. அதன் பிறகு கடந்த 23-ஆம் தேதி நிலவரப்படி 24.88 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இது தெரியாமலும், அடிப்படை ஆதாரம் இல்லாமலும் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதில், வரும் ஜனவரி 21ம் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக விஜயகாந்த்திற்கு சம்மனும் அனுப்பப் பட்டுள்ளது.