சென்னை விமான நிலையத்தில் என்னதான் நடக்கிறது.. அடுத்தடுத்து அவசரமாக தரையிறங்கிய விமானங்களால் பரபரப்பு
Recommended Video
சென்னை: சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். ஆனால், விமானம் தரையிறங்கிய ஓடு பாதை அவசரமாக மூடப்பட்டது.
இன்று மதியம் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் விமானம் ஒன்று கிளம்பியது.
இந்த விமானத்தில், 190 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்தனர். விமானம் கிளம்பி பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கவனித்தார்.
அவசர தரையிறக்கம்
உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் கூறினார். எனவே விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதலாவது ஓடுதளத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஆனால், அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் ஒன்று வெடித்தது. ஏற்கனவே அவசர தரையிறக்கத்தால் பீதியில் இருந்த பயணிகள், இதனால் பெரும் பீதிக்கு ஆளாகினர். ஆனால், பைலட் திறமையாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி தப்பினர்.
பயணிகளுக்கு ஏற்பாடு
பயணிகள் அனைவரும் தங்க வைக்கப்பட்டு, மாலையில் டெல்லி கிளம்பிய மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே முதலாவது ஓடுதளம் மூடப்பட்டது. 2வது ஓடுதளம் வழியாக விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் அங்கும் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது.
அடுத்த விமானம்
4 பயணிகளுடன் எத்தியோபியா கிளம்பிய விமானம் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக 2வது ஓடுதளத்தில் தரையிறங்கியது. எனவே அந்த ஓடுதளமும் மூடப்பட்டது. எனவே, பல்வேறு நகரங்களுக்கும் செல்ல கூடிய 17 விமானங்கள் தாமதமாகின. ஒருவழியாக சில நிமிடங்கள் கழித்து, 2வது ஓடுதளம் சரி செய்யப்பட்டு அதன் வழியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு களமான விமான நிலையம்
விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், அவ்வப்போது தீயணைப்பு வாகனங்கள், மீட்பு வாகனங்கள் உள்ளிட்டவை அங்கு விரைந்தன. இதனால் விமான நிலைய வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது. விமானத்தின் டயர் வெடித்தது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.