தீயை அணைப்பதில் தாமதம் ஏன்? சென்னை மாவட்ட கலெக்டர் விளக்கம்
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பற்றி எரியும் தீ இன்று இரவிற்குள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தாமதம் ஏற்படுவது ஏன் என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் பரபரப்பாக இருக்கும் தி. நகரில் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 15 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் நிலையில் இன்று மாலை அக்கட்டடத்தின் 2, 3, மற்றும் 4 தளத்தில் மீண்டும் தீ பற்றி எரிகிறது.
இந்த தீ விபத்தால் 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். சுமார் 15 மணி நேரமாக தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் உஸ்மான் சாலை பக்கம் பொதுமக்கள் வரவேண்டாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப்பகுதியில் போக்குவர்துத நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், கட்டடத்தின் அமைப்பு காரணமாகவே தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தீயணைக்கும் பணியில் 125 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10 நிமிடத்துக்கு ஒரு லாரி தண்ணீர் என்ற வகையில், 50 லாரிகளில் தீயணைக்கும் பணிக்காக தண்ணீர் எடுத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்தால் தி.நகர் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது என்றார். பற்றி எரியும் தீ இன்று இரவிற்குள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.