விரிவானது சென்னை.. 16 வட்டங்களை இணைத்து சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கம்!
16 வட்டங்களை இணைத்து 122 வருவாய் கிராமங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
Recommended Video
சென்னை: 16 வட்டங்களை இணைத்து 122 வருவாய் கிராமங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மொத்தம் 122 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வடசென்னை கோட்டம்
இதன்படி, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு, வடசென்னை கோட்டம் - திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்களைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை கோட்டம்
இதேபோல் அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய சென்னை கோட்டம் - அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்சென்னை கோட்டம்
இதேபோல் கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு தென் சென்னை கோட்டம் - கிண்டி, மைலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்களைக் கொண்டதாக இருக்கும் என்றுடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைக்கு இணையாக..
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவாகப் பெறமுடியும்
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மருத்துவ வசதிகள், மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு, கல்வி தொடர்பான பணிகள், பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் தொடர்பான பணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த பணிகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிலம் தொடர்பான பணிகள் மற்றும் நலத்திட்டங்களை எளிதில் விரைவாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.