இ-பிசினஸ் மூலம் சென்னை மாணவர்களுக்கு போதைப் பொருள்: பன்னாட்டு நிறுவன அதிகாரியின் திடுக் வாக்குமூலம்
சென்னை: தமிழகத்தில் மாணவர்களுக்கு கூரியர் மற்றும் இண்டர்நெட் வர்த்தகம் மூலமாக போதைப் பொருளை விநியோகம் செய்யப்படுவதாக சென்னையில் பிடிபட்ட பன்னாட்டு பதிப்பக நிறுவனத்தின் சி.இ.ஓ சஞ்சீவ் பட்நாகர் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நைஜீரிய நாட்டவர் போதைப் பொருள் விற்பதாக போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் சென்னை அம்பத்தூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஸ்பெயினுக்கு ரூ 20 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை கடத்திய நைஜீரிய இளைஞர் ஹன்றி சிட்டி சிக்கினார்.
அதன் பின்னர் அவருடைய கூட்டாளிகள் மேலும் இருவர் சிக்கினர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த சர்வதேச போதை பொருள் கடத்தல்காரன் தக்காளி ராஜா மற்றும் பெண் தாசில்தார் மகன் சாமிநாதன் ஆகியோரும் பிடிபட்டனர்.
இவர்கள் தங்களது வாக்குமூலத்தில், பரவசமூட்டும் பஜ்ஜி, தக்காளி, சிறுவன், பழுப்பு, தார், குதிரை என்ற ஆகிய பெயர்களில் கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன பணியாளர்களுக்கு போதை பொருட்கள் விநியோகித்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கூரியர் நிறுவனங்கள், பார்சல் நிறுவனங்கள் தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டன. அப்போது கூரியர் நிறுவனம் ஒன்றில் இருந்து பார்சலைப் பெற்ற சென்னை தரமணியில் உள்ள பன்னாட்டு பதிப்பகமான ஜோவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Jouve India Pvt Ltd) என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவான சஞ்சீவ் பட்நாகர் சிக்கினார். அவரிடம் இருந்த பார்சலில் ரூ20 ஆயிரம் மதிப்பிலான கோகைன் பிடிபட்டது.
இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இண்டர்நெட் வர்த்தகம் மற்றும் கூரியர் மூலம் மாணவர்களுக்கு தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக திடுக்கிட வைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.