மெரினாவில் கெடுபிடி சோதனைகள்... அனுமதியின்றி போராடக் கூடாது என போலீஸ் எச்சரிக்கை!
சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
Recommended Video
சென்னை : சென்னையில் போராட்டம் நடத்துவதற்காக போலீசார் ஒதுக்கிய இடங்களை விடுத்து வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அன்பு எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மெரினா கடற்கரையில் திடீரென இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகளுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தூத்துக்குடியில் நச்சை கக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் கோஷமிட்டனர்.
இளைஞர்களுக்கு ஆதரவாக கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக வந்த பொதுமக்களும் போராட்டத்தில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 2 போலீஸ் வாகனத்தில் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மெரினாவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு கூறியதாவது : ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கு என சென்னை மாநகர காவல்துறை சில பகுதிகளை ஒதுக்கியுள்ளது. அந்தப் பகுதியில் அனுமதி பெற்று முறையாக போராட்டம் நடத்தலாம். இதனை விடுத்து பொதுமக்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது.
சட்டவிதிகளுக்கு உட்பட்டு போராட்டத்தில் ஈடுபடலாம், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இதனிடையே இளைஞர்களின் திடீர் போராட்டத்தின் எதிரொலியாக மெரினா கடற்கரை சாலை முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரை சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. குறிப்பாக கருப்பு சட்டை, டீசர்ட் அணிந்து வரும் இளைஞர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். இதே போன்று நவீன வாகனங்களைக் கொண்டு கடற்கரைப் பகுதியில் ரோந்து செல்லவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.