என்னையே கேள்வி கேட்கிறீர்களா? டிடிவி தினகரன் வக்கீலுக்கு செம சூடு போட்ட நீதிபதி!
ஃபெரா வழக்கில் தீவிரம் காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தால் நீதிபதி மலர்மதி கடும் கோபமடைந்தார்.
சென்னை: ஃபெரா வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டுவது ஏன் என்று கேட்டதற்காக டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் நீதிபதி மலர்மதியிடம் செம டோஸ் வாங்கியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ததன் மூலம் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நீதிபதியின் 2 முறை எச்சரிக்கைக்குப் பின் இன்று வேறு வழியின்றி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைப்பதாக சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது இந்த வழக்கை அவசரப்படுத்துவது ஏன் என்று கேள்வி கேட்டார். யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் வழக்கு அவசரப்படுத்தப்படுகிறது என்றும் தினகரன் தரப்பு வக்கீல் கேட்டது தான் தாமதம் கோபத்தில் கொதித்த நீதிபதி நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை, சட்டம் நீதி என்ன சொல்கிறதோ அதைத் தான் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
என்னை நீங்கள் கேள்வி கேட்க வேண்டாம், உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் மட்டுமே நான் பதிலளிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிமன்ற நேரம் முடிந்த பின்னர் மாலை 4.45 மணிக்கு நடத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதி மலர்மதி 3 மணிக்கு தான் விசாரணை....கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் அமைதியாக நடையை கட்டினர் டிடிவி தினகரனும், அவர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞரும்.