தவறுதலாக பெட்டி மாறி ஏறிய இளம்பெண்ணுக்கு பளார் – சென்னையில் டிடிஆர் அட்டகாசம்!
சென்னை: சென்னையில் பெண் ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் என்ற காரணத்திற்காக டிக்கெட் பரிசோதகர் அவரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் இளம் பெண் நிஜாய்ஸ் .
நேற்று முன்தினம், இவர் நுங்கம்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறினார்.
முதல் வகுப்பில் பயணம்:
2 ஆவது வகுப்பு டிக்கெட் அவர் கையில் இருந்தது.அவசரமாக ரயிலில் ஏறியதால் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டார். மாம்பலத்தில் பெண் டிக்கெட் பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்தார். பயணிகளிடம் டிக்கெட்களை வாங்கி சோதனை செய்தார்.
டிக்கெட் பரிசோதகர் ஆவேசம்:
இளம் பெண் நிஜாய்ஸ் அவரிடம் இருந்த டிக்கெட்டை காட்டினார். அது 2 ஆவது வகுப்பு டிக்கெட் என்பதை அறிந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ஆவேசம் ஆனார். இளம் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து ரயிலில் இருந்து கீழே இறங்கு என்றார்.
கன்னத்தில் பளார்:
‘‘அவசரத்தில் ஏறி விட்டேன் அபராதம் செலுத்தவும் தயாராக இருக்கிறேன்'' என்று அந்த பெண் கூறினார். ஆனால் ரயில் நின்றதும் அந்த பெண்ணை ரயில் பெட்டியில் இருந்து கீழே இழுத்தார். கன்னத்திலும் அறைந்தார்.
மீண்டும் அறை:
டிக்கெட் பரிசோதகர் அறைக்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போதும் அறைந்தார். இதற்குள் அந்த பெண் தனது நண்பர்களை அழைத்தார்.
அவமானப் படுத்திய பரிசோதகர்:
‘‘கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருந்தும், மற்ற பயணிகள் முன்னிலையில் டிக்கெட் பரிசோதகர் தன்னை கிரிமினல் குற்றவாளி போல அடித்து அவமானப்படுத்தி விட்டார்'' என்று கூறினார்.
மன்னிப்பு கேட்ட அதிகாரி:
இது குறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் இளம் பெண் நிஜாய்ஸ் புகார் மனு கொடுத்தார். மூத்த ரயில்வே போலீஸ் அதிகாரி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். டிக்கெட் பரிசோதகர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து புகாரைத் திரும்ப பெற்றார் நிஜாய்ஸ்.