வேலை பார்த்த நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி நஷ்டம் ஏற்படுத்திய என்ஜினீயர் கைது
சென்னை: சென்னையில் என்ஜினீயர் ஒருவர் தான் பணியாற்றிய நிறுவனத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பு ஏற்படுத்திய காரணத்தால் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள குட்வின் இந்தியா என்ற நிறுவனத்தின் மேலாளர் கணேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
அந்த மனுவில், "எங்கள் கம்பெனியில் விற்பனை பிரிவு பொறியாளராக வேலை பார்த்த மணிகண்டன் என்பவர், எங்கள் கம்பெனி தொழில்நுட்ப ரகசியங்களை கற்றுக்கொண்டு தற்போது அவரே புதிய கம்பெனி ஒன்றை தொடங்கி விட்டார்.
அவர் எங்கள் கம்பெனியில் வேலை பார்த்தபோது, போட்டிருந்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு, எங்கள் கம்பெனிக்கு ரூபாய் 1 கோடி இழப்பை ஏற்படுத்தி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதன் அடிப்படையில் என்ஜினீயர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.