கை நிறைய துப்பாக்கி.. எக்ஸ்பிரஸ் அவென்யூவில் புகுந்த கமாண்டோக்கள்.. நைட் ஷோ போனவர்கள் பீதி!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தை கமாண்டோ படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திற்குள் கமாண்டோக்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற பிரபல வணிக வளாகம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த வணிக வளாகத்திற்கு நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதும். இன்று நள்ளிரவு 2 மணியளவில் ஷாப்பிங் மாலை கமாண்டோ படையினர் திடீரென சுற்றி வளைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
அனைவருமே ஆயுதம் தாங்கிய நிலையில் வணிக வளாகத்தை சுற்றியுள்ள நுழைவுப் பாதைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அச்சத்தில் உறைந்த மக்கள்
யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை. வெளியேயும் செல்லவிடவில்லை. இதனால் வணிக வளாகத்தில் காவலுக்கு நின்றிருந்த காவலாளிகள் அச்சமடைந்தனர்.
பதட்டம்
அப்போது இரவு காட்சி சினிமா முடிந்து வெளியே வந்த பொதுமக்கள் ஆயுதம் தாங்கிய கமாண்டோ படையைக் கண்டு பதற்றம் அடைந்தனர். விரைவாக வெளியேற முயன்ற அவர்களை கமாண்டோ படையினர் தடுத்து நிறுத்தினர்.
அட ஒத்திகையாம்யா!
ஏதோ விபரீதம் நிகழப் போவதாக அச்சம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து, கமாண்டோ படையினர் கலைந்து சென்றனர். இது தமிழக காவல் துறை கமாண்டோ பிரிவின் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.
தீவிரவாதிகளை தடுக்கவாம்
தென் இந்தியாவில் வணிக வளாகம், ரயில் நிலையங்களில் குண்டு வைக்கப் போவதாக தீவிரவாதிகள் எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற பயிற்சிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.