ஏரிகளில் நீர்மட்டம் சரிவு.. குடிநீர் பஞ்ச அபாயத்தில் சென்னை...கருணைக் காட்டுமா ஆந்திரா ?
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது.
சென்னை: வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. இதனால் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சம் வடகிழக்கு பருவமழையாகும்.
இதன் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை 70 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 20016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான 15 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை
அதேபோன்று சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் தண்ணீர் பஞ்சத்தை சென்னை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் கோடையில் சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம் எழுந்துள்ளது. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனிடையே தமிழக அரசின் சார்பில் சென்னை மாநகராட்சியின் குடிநீர் தேவையை சமாளிக்க குறைந்தபட்சம் 3 டி.எம்.சி தண்ணீராவது வழங்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேய அடிப்படையில் இவ்விவகாரத்தில் ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு தண்ணீர் வழங்கும் விவகாரம் தொடர்பாக தீவிர பரிசீலனையில் ஆந்திர அரசு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.