அமைச்சர் விஜயபாஸ்கர் பயணித்த சென்னை விமானம் திடீர் தரையிறக்கம்
சென்னை: திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல புறப்பட்ட ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இவ்விமானத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை எம்.பி ஆகியோர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் தினமும் 3 நேரம் விமான சேவையை இயக்கி வருகிறது. இரவில் இயக்கப்படும் விமான சேவை 9.30 மணிக்கு வந்து 10 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல பயணிகளுடன் சென்னையில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு வந்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் எம்பி தம்பிதுரை, தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட பயணிகள் 66 பேர் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
பின்னர் விமானத்தை பைலட் ரன்வே பகுதிக்கு இயக்கிய போது விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது மானிட்டரில் தெரிந்தது. இதுகுறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறை மற்றும் ஏர்லைன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு விமானத்தை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானம் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறக்கப்பட்டு பயணிகள் தங்கும் அறையில் தங்க வைக்கப்பட்டனர். உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமான பைலட் கண்டுபிடித்ததால் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி தம்பிதுரை, தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட 66 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.