செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட தாமதமே பெரு வெள்ளத்திற்குக் காரணம்?
சென்னை: சென்னையை புரட்டிப் போட்ட பெரு வெள்ளத்திற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரைத் திறப்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த வெள்ள சேதத்திற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
அதிகார வர்க்கத்தில் ஏரியைத் திறப்பதில் நிலவிய காலதாமதம், அலட்சியம் ஆகியவையும் முக்கியக் காரணம் எனப்படுகிறது.
நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் தலைமைச் செயலககத்தில் நடந்தேறிய பல்வேறு குழப்பங்களை சுட்டிக் காட்டி ஏரியைத் திறப்பதில் நிலவிய தாமதமே பெரு வெள்ளத்திற்குக் காரணம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தோர்.
கன மழை எச்சரிக்கை விடுத்தும்...
சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மிகப் பெரிய அளவில் மவை பெய்யும். 500 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் எந்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் அரசுத் தரப்பில் செம்பரம்பாக்கம் ஏரியை தயார்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை எச்சரித்திருந்தும்...
ஏரியிலிருந்து முன்கூட்டியே அதிக அளவில் தண்ணீரைத் திறந்து விட்டு ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தனர். அவரும் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்துத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நவம்பர் 26ம் தேதியே...
நவம்பர் 26ம் தேதியே இந்த வேலைகள் நடந்துள்ளன. அப்போது ஏரியின் நீர் இருப்பை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 26 முதல் 29ம் தேதி வரை அவையும் இல்லை. அடையாறு ஆறும் மிக குறைந்த அளவிலான தண்ணீரையே கொண்டிருந்தது.
வாயே திறக்காத தலைமைச் செயலாளர்...
இந்த விவரங்களை பொதுப்பணித்துறைச் செயலாளர் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்தும் கூட அவரிடமிருந்து பதிலே வராமல் இருந்துள்ளது. அவர் யாருக்காக காத்திருந்தார் ஏன் அமைதி காத்தார் என்பது தெரியவில்லை.
33,500 கன அடிதான்...
இத்தனைக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 33,500 கன அடி நீர்தான் வெளியேற்றப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பெரும் மழை காரணமாக கூடுதலாக நீர் சேர்ந்து பெரிய வெள்ளத்தை உண்டு பண்ணி விட்டது.
ஒரு லட்சம் கன அடி நீர்...
அடையாற்றில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கன அடி நீர் போய்க் கொண்டிருந்தது. இதுவே பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக் காரணமாக கூறப்படுகிறது.
தவிர்த்திருக்கலாம்...
இது குறித்து சென்னை வளர்ச்சி ஆய்வுக் கழக பேராசிரியர் ஜனகராஜன் கூறுகையில், ‘இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே நீர் இருப்பைக் குறைத்திருக்கலாம். ஆதனால் அதைச் செய்யாமல் விட்டதால் தான் பெரிய பாதிப்பு ஏற்பட காரணமாகி விட்டது.
தப்புக் கணக்கு...
செம்பரம்பாகம்கம் ஏரியை மட்டும் அதிகாரிகள் கணக்கில் எடுத்துள்ளனர். உண்மையில் அங்கிருந்து அடையாறுக்கு நீர் வருவதற்கு முன்பு 200 குளங்களின் நீரும் அதில் இணைகிறது. எனவேதான் மிகப் பெரிய வெள்ளமாக அது மாறி விட்டது.
பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்...
எங்கு தவறு நடந்தது. யார் தவறு செய்தது என்தபதை விட யாரோ செய்த தவறால்தான் இத்தனை லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விட்டனர் என்பது தான் மிகப் பெரிய வருத்தமாக இருக்கிறது.