இடி மின்னலுடன் சென்னையை மிரட்டிய மழை... சட்டென்று மாறிய வானிலை
சென்னை: கொளுத்திய கோடை வெப்பத்துக்கு இதமாக நேற்றிரவு இடியும் மின்னலுமாய் மிரட்டிய மழை சென்னையை குளிர்வித்துள்ளது. கடந்த ஒருவாரகாலமாக வியர்வையில் குளித்த சென்னைவாசிகள் தற்போது குளுமையை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த ஒருமாதகாலமாகவே சென்னையில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த வாரம் திடீர் மழை கொட்டியது. பின்னர் மீண்டும் கடுமையான வெயிலின் தாக்கத்தினால் பகல் மட்டுமல்லாது இரவிலும் வியர்வையில் குளித்தனர் சென்னைவாசிகள்.
இதனிடையே நேற்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் குளுமையான காற்று வீசியது. சுமார் 7.30 மணியளவில் சிறு தூரலாக துவங்கிய மழை, சில நிமிடங்களில் வேகம் பிடித்து இடி, மின்னலுடன் விஸ்வரூபம் எடுத்தது. சுமார் அரைமணிநேரங்களுக்கு மேல் விடாமல் பெய்த மழையால் சாலையில் சென்றவர்கள் நனைந்தனர். மழையில் இருந்து தப்பிக்க வழிதேடி இரு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து சென்றவர்களும் கடை, அலுவலகங்களின் வாசலில் ஒதுங்கி நின்றனர்.
எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மைலாப்பூர், கிண்டி, நுங்கம் பாக்கம், ஈக்காட்டு தாங்கள், அண்ணா நகர், அசோக் நகர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அரைமணிநேரம் மின்சாரம் தடைபட்டது.
சென்னையில் குளுமை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரை ஓட்டையாக இருந்ததால் பிளாட்பாரத்தில் மழை நீர் புகுந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரியில் மழை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்த தொடர்மழையால் அனைத்து நீர் நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 13 மின்நீர் நிலையங்களில் உள்ள அணைகள் முழு கொள்ளவை எட்டும் நிலையுள்ளது. எல்லா நீர் தோக்கங்களிலும் நீர் நிலை வெகுவாக உயர்ந்து வருவதால் வரும் நாட்களில் நீர் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதே போல் தமிழகத்தில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மழை
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, கொடுமுடி, கவுந்தப்பாடி, பவானிசாகர், குண்டேரிபள்ளம், நம்பியூர், புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் மழையால் வனப்பகுதி அனைத்தும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் மழையால் பூமி குளிர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
தடைபட்ட மின்சாரம்
ஈரோடு நகரிலும் பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.மேலும் ஈரோடு நகரில் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
சூறாவளி காற்றுடன் மழை
கோபி பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கோபி மற்றும் நல்ல கவுண்டன் பாளையம், மூலவாய்க்கால், கரட்டடி பாளையம், கொளப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
வாழை மரங்கள் பாதிப்பு
ஆப்பக்கூடல் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் விடிய விடிய கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டனர். அந்தியூர், பெருந்துறை, ஆப்பக்கூடல் உள்பட பல்வேறு இடங்களில் அடித்த சூறாவளி காற்றினாலும், பலத்த மழையாலும் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.