இம்புட்டு மழை பெய்தும் வீணாப் போச்சே 10 டிஎம்சி தண்ணீர்..!
சென்னை: சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகள் சீக்கிரமே நிரம்பி விட்டதால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சுழற்றிப் போட்ட மழையால் கிடைத்த தண்ணீரில் 10 டிஎம்சி அளவிலான தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பெய்வதை விட அதிக அளவிலான மழையை இந்த முறை தமிழகம் பெற்றுள்ளது. இதனால் ஏரிகள், குளகள் நிரம்பி வருகின்றன. அணைகளிலும் கூட நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஆனால் இந்த மழையால் நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய நீரில் 10 டிஎம்சி அளவுக்கு கடலில் கலந்து வீணாகி விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
3 மாத மழை மொத்தமாக கொட்டியதால்
3 மாதத்தில் பெய்திருக்க வேண்டிய மழை மொத்தமாக கொட்டித் தீர்த்து விட்டதால் அதிலும் இரண்டு மடங்கு அதிக அளவிலான மழை பெய்ததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னை ஏரிகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் வீராணம் ஏரிகள் நிரம்பியதோடு அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மதுராந்தகம் ஏரி
பேயாய்ப் பெய்து தீர்த்த கனமழையால் மிகப் பெரிய ஏரியான, மதுராந்தகம் ஏரியே நிரம்பி விட்டது. அதில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
வீணாகப் போகும் நீர்
இப்படி ஏரிகள், குளங்கள் எல்லாம் முன்கூட்டியே நிரம்பி விட்டதால் தற்போது உபரி நீர் தேவையில்லாமல், வீணாக கடலில் போய்க் கலந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து சேமித்து வைக்க வழியில்லாமல் போய் விட்டது.
ஏரிகள் தூர் வாரப்படவில்லை
மேலும் ஏரிகளையும், குளங்களையும் தூர் வாரியிருந்தால் வீணாகப் போகும் நீரில் பாதியை நிச்சயம் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
திட்டம் உள்ளது
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வெள்ளத்தை தேக்குவதற்கு ரூ.497.68 கோடியில் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன.
கணிசமாக தேக்கலாம்
இதன் மூலம் கடற்கரை யோரங்கள், இதர பகுதிகளில் ஏரிகள், நீர்நிலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பருவமழையின்போது நீர்நிலைகள் இருப்பும் அதிகரிக்க கூடும். மேலும் மழைநீரை கணிசமாக தேக்கி வைக்கலாம்.
ஆழப்படுத்தும் திட்டம்
புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 1 மீட்டர் அளவுக்கு ஆழப்படுத்தும் திட்டம் உள்ளது. இதற்கு ரூ.395 கோடி செலவாகும். இதன்மூலம் பருவ காலங்களில் கூடுதலாக 2.79 டி.எம்.சி. வரை நீரை தேக்கி வைக்கலாம். தற்போது பெய்துள்ள மழையின் மூலம் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட 10 ஏரிகளில் 10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பில் உள்ளது.
வீணான தண்ணீர்
ஆனாலும் இந்த மாதத்தில் மட்டும் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ள நீரானது பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலையாற்றிலும், செம்பரபாக்கத்தில் இருந்து அடையாற்றின் வழியாகவும் திறந்து விடப்பட்ட 10 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது என்றனர்.
அரசுகளே, ஆட்சியாளர்களே மக்களுக்காகவும் யோசியுங்கள்.. ஏதாவது உருப்படியாக செய்யுங்கள்.