ஓய்வூதியம் கொடுக்கப்படாததற்கு வருத்தம்.. சுதந்திர போராட்ட தியாகியிடம் மன்னிப்பு கேட்ட உயர்நீதிமன்றம்
சுதந்திர போராட்ட தியாகி காந்திக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் உயர்நீதிமன்ற நீதிபதி அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
சென்னை: சுதந்திர போராட்ட தியாகி காந்திக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் உயர்நீதிமன்ற நீதிபதி அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
சுதந்திர போராட்ட தியாகி காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்று கொடுத்து இருந்தார். அதில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சரியாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். தியாகி காந்திக்கு 37 ஆண்டுகளாக ஓய்வூதியம் மறுக்கப்பட்டுள்ளது.
பல நாட்கள் ஆகியும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.தற்போது இதன் காரணமாக காந்தியிடம் சென்னை உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அதன்படி ''ஓய்வூதியம் வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காததற்கு மன்னிப்பு கோருகிறோம். காந்திக்கு ஓய்வூதியம் வழங்க 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் ஓய்வூதியத்தை அவர் வீட்டுக்கு சென்று கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதேபோல் ஓய்வூதியம் வழங்கப்படாத போராட்டக்காரர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.