டெங்கு சிகிச்சை செலவை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்காதது ஏன்? நீதிபதி கேள்வி
டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏன் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை: டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படாதது ஏன் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாரி வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி தொற்று நோய் வரமால் தடுக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குடன் அவர் கூடுதல் மனுவையும் தாக்கல் செய்தார். அதில், டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் இதே காரணத்துக்காக அதிக அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.
கூட்ட நெரிசல்
இதனால் பலருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் போகிறது. மேலும் டெங்கு காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு முதல்வரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த காய்ச்சல் சேர்க்கப்படாததால் இலவச சிகிச்சை இல்லை என தெரிவிக்கின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கான செலவு குறித்து வழக்கு
எனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ஏராளமானோர் இறப்பு
அப்போது நீதிபதிகள், முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது சூரியபிரகாசம், தமிழகத்தில் இதுவரை 10 ஆயிரம்பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 பேர் மரணமடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு சென்றால் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை தர மறுக்கிறார்கள் என்று வாதிட்டார்.
12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை முழுவதுமாக ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் நதி, அடையாறு ஆகியவற்றை சுத்தப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதேபோல குப்பைகள், கழிவு நீர் தேங்காமல் இருக்க எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பது குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.