நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
Recommended Video
சென்னை: நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று மதுரை பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணை வேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார்.
இது குறித்து ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் மாணவிகளின் புகாரின் பேரிலும் அருப்புக் கோட்டை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். ஒரு நபர் குழுவான அதன் தலைவர் சந்தானம் விசாரணைகளை நடத்தி முடித்துவிட்டு வரும் 15-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிட கூடாது என்று கணேசன் என்பவரது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில் நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்று பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையை முடித்து ஆளுநரிடம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.