திமுக எம்.எல்.ஏக்களுக்கான உரிமை குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் தடை
திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டசபை உரிமை குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்டசபைக்கு அந்த பொட்டலங்களை கொண்டு சென்றனர். தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.
திமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
அதன்படி உரிமை குழு கூட்டம் கூடியது. அதில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரினார்.
ஹைகோர்ட்டில் வழக்கு
அத்துடன் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் ஹைகோர்ட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்தார். தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் போலீஸ் உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த திமுக உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
வாதாடிய கபில்சிபல்
அந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார்.
இடைக்கால தடை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கானது செப்டம்பர் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.