சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும்.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை
தமிழக அரசு சிலை கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக அரசு சிலை கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக வேறு ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள சிலைகளை கடத்துவதை தடுக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனுதாக்கல் செய்தார். அதுகுறித்து வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் நடக்கிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுக்கும்போதும் கூட கடத்தல் நடக்கிறது. சிலை கடத்தலை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.
இதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவில்லை. தொடர் சம்பவங்கள் நடந்தும் அரசு அமைதியாக இருக்கிறது. சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும் என்று சிலை கடத்தலுக்கு எதிரான வழக்கில் சென்னை ஹைகோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.