நீங்க ஜெயலலிதா மகளா.. அம்ருதாவின் மனுவை டிஸ்மிஸ் செய்தது சென்னை ஹைகோர்ட்!
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று உயர்நீதிமன்றம் அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டது.
பெங்களூரைச் சேர்ந்தவர் அம்ருதா. இவர் தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்றும் தான் ஷோபன்பாபுவுக்கு பிறந்தவர் என்றும் இத்தனை நாட்கள் இந்த உண்மை மறைக்கப்பட்டு ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜாவிடம் வளர்க்கப்பட்டதாகவும் ஒரு புயலை கிளப்பினார் அம்ருதா.
இந்நிலையில் தனது வளர்ப்பு தந்தை இறக்கும் தருவாயில் இந்த உண்மையை தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு சொந்தம் கொண்டாடி சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் ஜெயலலிதாதான் தனது தாய் என்று அறிவிக்க அவரது உடலை தோண்டி எடுத்து மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஐயங்கார் முறைப்படி மீண்டும் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்றும் அவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் மகள் தான் அம்ருதா என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்குத் தொடர்ந்துள்ளதை இந்த நீதிமன்றம் கண்டிக்கிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஏன் தொடரவில்லை. சந்தியாவின் அதிகாரப்பூர்வமான குழந்தைகள் ஜெயலலிதாவும் ஜெயக்குமாரும்தான். ஜெயக்குமாரின் மகள் தீபா, மகன் தீபக் ஆகிய இருவரும் ஜெயலலிதா இறுதிச் சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
திருவிளையாடல் படத்தில் உள்ள கதை போல் அம்ருதா வழக்கு உள்ளது. ஐயங்கார் முறைப்படி தான் இறுதிச் சடங்கு நடக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. அம்ருதாவின் மரபணு சோதனை கோரிக்கைக்கு வலுவான ஆதாரம் ஏதும் இல்லை. ஜெயலலிதாவுடன் அம்ருதா எடுத்து கொண்ட ஒரு புகைப்படம் கூட இல்லாதது ஏன்.
ஜெயலலிதா பலமுறை முதல்வராக இருந்துள்ள போதிலும் அம்ருதாவை ஒருபோதும் சந்தித்ததில்லை. எனவே விளம்பரத்துக்காக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.