எஸ்.வி.எஸ். கல்லூரி தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட்
சென்னை: 3 மாணவிகள் மர்ம மரணம் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.வி.எஸ். கல்லூரியின் தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் மூன்று பேரும் கொலை செய்யப்பட்டதாக கல்லூரியின் தாளாளர் வாசுகியே ஒப்புக் கொண்டார்.
இந்த வழக்கில் வாசுகி, அவரது மகன் சுவாகர் சர்மா, கல்லூரியின் முதல்வர் கலாநிதி, வாகன ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் வாசுகி, சுவாகர் வர்மா, வெங்கடேசன் ஆகியோர் ஜாமீன் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் கோரினர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க மாணவிகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரிய வாசுகியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சுவாகர் வர்மா மற்றும் வெங்கடேசனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரும் தினமும் சிபிசிஐடி முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.