8 வழிச்சாலை: ஒரு நிதானம் இல்லை.. போலீஸ் அத்துமீறுவது ஏன்... நீதிபதி சரமாரி கேள்வி
8 வழிச்சாலை திட்டத்தில் போலீஸார் அத்துமீறுவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை: சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது போலீஸார் அத்துமீறுவது ஏன் என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
சேலம் -சென்னை இடையே 8 வழிச்சாலை போடப்படும் என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தொழில் பெரும், நாடு முன்னேறும் என்று சப்பை கட்டு கட்டினாலும் விவசாயத்தை அழித்து விட்டு வரும் திட்டம் தேவையில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கூறி நிலம் உரிமையாளர்கள் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று இரு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அக்கறை
அப்போது நீதிபதிகள் கூறுகையில் எட்டு வழிச்சாலைக்காக மக்களை அணுகுவதில் நிதானம் இல்லை. வாகனம் எவ்வளவு விரைவாக செல்வது என்பதை விட விவசாயி நிலங்கள் மீது அக்கறை தேவைப்படுகிறது.
அகற்றுவதில்
நிலம் கையகப்படுத்தும் போது போலீஸாரும் அத்துமீறக் கூடாது. வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை கீழே தள்ளிவிடுவது கடும் கண்டனத்துக்குரியது. காவல் துறை படைகளை பேனர்களை அகற்றுவதில் காட்டுங்கள்.
எந்த திட்டம்
திருவனந்தபுரம்- நாகர்கோவில் சாலை திட்டம் நடந்தது எப்படி? காவல் துறையை பயன்படுத்தி அரசு அத்துமீறுகிறது. கடைசி நேரத்தில்தானே காவல் துறையினர் வரவேண்டும் என்று கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில் ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கின்றனர் என்றார்.
பதில் மனு
அதற்கு நீதிபதிகள் கூறுகையில் தங்களுக்கு பாதகமாக செயல்படும் திட்டத்துக்கு எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதற்காக அத்துமீறக் கூடாது. விழிப்புணர்வு பிரசாரம் செய்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும். திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கட்டங்களை மத்திய அரசு பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அப்போது 8 வழிச்சாலை திட்டத்துக்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது. 8 வழிச்சாலை பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இந்த வழக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.