தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்... நீதிபதி கிருபாகரன் அதிரடி
தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பேறு கால விடுப்பு காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகாசியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் ஆந்திரம் மாநிலம், சித்தூரில் உள்ள ராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் 6 மாத பேறு கால விடுப்பு எடுத்ததை கருத்தில் கொள்ளாமல் தன்னை தொடர்ந்து பணியாற்ற ஆரம்ப சுகாதார நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் முதுநிலை படிப்பில் தன்னால் சேரமுடியவில்லை என்றும் சென்னை ஹைகோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில் பேறு கால விடுப்பு காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது. 2 குழந்தைகளுக்கு மட்டுமே பேறு கால விடுப்பு என்பதையும் ஏன் கட்டாயமாக்கக் கூடாது.குழந்தைகளுக்கான உணவுப்பொருள் விளம்பரப்படுத்துதல் தடை சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து கிருபாகரன் கூறுகையில், பேறு கால விடுப்பு காலத்தை தமிழகம் உயர்த்தியதை போன்ற மற்ற மாநிலங்களும் உயர்த்த நடவடிக்கை தேவைப்படுகிறது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தை ஏன் விளம்பரப்படுத்தக் கூடாது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமை என ஏன் நீதிமன்றம் அறிவிக்கக் கூடாது. தாய்ப்பால் ஊட்டச்சத்து மட்டுமின்றி மார்பக புற்றுநோயை தடுக்கும் என்பதை ஏன் உணர்த்த கூடாது. இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் வரும் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.