ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு இடைக்காலத் தடை.. ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை : வாகன ஓட்டிகள் அசல் வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு செப்டம்பர் 5ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் ஒரிஜினஸ் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார். இதனையடுத்து இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுகுமார் என்பவரும் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 139ன்கீழ் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமல்ல என்றும், இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்றும் அந்த ரிட் மனுவில் சுகுமார் தெரிவித்திருந்தார்.எனவே இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இந்த வழக்கு நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கட்டாயம் அசல் லைசென்ஸ் வைத்திருக்கச் சொல்வதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நீதிபதி மோட்டார் வாகன சட்டப்படி அசல் லைசென்ஸை வைத்திருப்பதை கட்டாயப்படுத்த முடியாது என்றார், மேலும் இதில் பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செப்டம்பர் 3ம் தேதி முதல் தான் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி துரைசாமி செப்டம்பர் 5ம் தேதி வரை வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக கூறினார். இரண்டு வழக்குகளையும் சேர்த்து திங்கட்கிழமை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.