நீதிமன்றத்தில் செல்ஃபோன் உபயோகித்த 2 போலீசாருக்கு ரூ.250 அபராதம்
மதுரை: நீதிமன்றத்தில் செல் ஃபோன் உபயோகித்த இரண்டு போலீசாருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்புமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அறைக்குள் செல் ஃபோன் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற அறைக்குள் செல்லும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களது செல் ஃபோன்களை அணைத்து வைக்க வேண்டும். மீறி பயன்படுத்துவோரின் செல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்படும்.
இந்நிலையில், நேற்று நீதிபதி எஸ். வைத்தியநாதன் வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டு இருந்தபோது, நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இரண்டு போலீஸாரின் செல் ஃபோன்கள் ஒலித்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நீதிமன்ற அறைக்குள் செல் ஃபோன்கள் உபயோகிப்போரிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையை வெள்ள நிவாரணத்துக்கு வழங்க நீதிபதி எஸ். வைத்தியநாதன் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் அவர் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, இரண்டு போலீசாருக்கும் தலா ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையினை வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.