தடையை மீறி ஸ்டிரைக்... செப் 15-இல் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக ஹைகோர்ட் கிளை உத்தரவு
தடையை மீறி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தடையை மீறி ஸ்டிரைக் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வரும் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. அரசு அலுவலகங்கள் மூடியுள்ளதால் பொதுமக்களும், ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பெஞ்ச், வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ தனது போராட்டத்தைத் தொடருவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அமைப்பினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றக் கிளை அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் சேகரன் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், மோசஸ் தாமஸ் உள்ளிட்டோர் வரும் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.