நவோதயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் உண்டா இல்லையா.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை: நவோதயா பள்ளிகளில் தமிழ்மொழியை பாடமாக வைக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டம் 1986-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டது.
படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தமிழ்நாடு தவிர எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக் கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த பள்ளிகளை அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் இந்த பள்ளிகளில் இந்தி ஒருபாடமாக பயிற்றுவிக்கப்படுவதால் அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது.
இந்நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி அப்பள்ளிகள் சென்னையிலும், கரூரிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க குமாரி மகா சபா வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், நவோதயா பள்ளிகளில் தமிழ் மொழியை பாடமாக வைக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசும், நவோதயா சமிதியும் வரும் 28-ஆம்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.