இயற்கைச் சீற்றத்துக்கு அரசை குறை கூடாது..மீனவர்களை மீட்க கடற்படைக்கு ஹைகோர்ட் உத்தரவு
நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க கடற்படை, இந்திய கடலோர காவல் படைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஓகி புயலின்போது நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கடற்படை, இந்திய கடலோர படையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 30-ஆம் தேதி ஓகி புயலால் தென் தமிழகமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களும் தமிழக எல்லையில் உள்ள கேரள பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற தமிழக, கேரள மீனவர்கள் கரை சேரவில்லை.
மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தரகோரி நாகர்கோவில், கன்னியாகுமரியில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களை மீட்பது குறித்து மீனவர் நலன் அமைப்பும், வழக்கறிஞர் சூரிய பிரகாசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், இயற்கை சீற்றங்களின் போது அரசை குறை கூறக்கூடாது. ஓகி புயலால் நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் துரிதப்படுத்த வேண்டும்.
இழப்பீடுகளை நிர்ணயிக்க முடியாது. அறிக்கை தாக்கல் செய்வதால் ஒன்றும் ஆகாது. மீனவர்கள் மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய உதவிகளை மத்திய அரசும், மாநில அரசும் செய்ய வேண்டும். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தார்.