பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை : பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிரமம் இல்லாமல் பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை அரசுப்பள்ளி மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி பயணம் செய்து, பள்ளிக்கு செல்வதாக புகைப்படத்துடன் செய்தி ஒன்று பத்திரிகையில் வெளியானது.
இந்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், ஏன் பள்ளி நேரங்களில் மாணவர்களுக்காக கூடுதல் சிறப்புப் பேருந்து இயக்கக்கூடாது என்று கேள்விக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், பெண்கள், சிறுவர்களுக்காக சென்னையில் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில், வெவ்வேறு இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு வழித்தடங்களை உருவாக்கி, பள்ளி மாணவர்கள் மட்டும் பயணிக்கும் விதமாக சிறப்புப் பேருந்துகள் இயக்கவேண்டும்.
பெண்கள், சிறுவர்களுக்கு என்று ஏற்கனவே இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். கூட்டம் அதிகமான பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்யாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்' என்று கூறியுள்ளனர்.