வெற்றிவேல் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 3-க்கு ஒத்திவைப்பு
வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பெற்றபோது அவரை பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சசிகலா குடும்பத்துக்கும் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பிருப்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி, அதாவது இடைத்தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒன்றை வெளியிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அவர் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர்
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்தார்.
அதன்பேரில் அவரை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அந்த மனு மீது வரும் ஜனவரி 3-ஆம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.