அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு தடையில்லை... மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
துணைவேந்தர் இல்லாமல் நடைபெற உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் 37வது பட்டமளிப்பு விழாவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என்று தடை கோரி தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர் இல்லாத நிலையில் அவருக்கு மாற்றாக வேறு ஒரு உயர் அதிகாரியை கொண்டு பட்ட சான்றிதழில் கையெழுத்திட்டு பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் அருள் அறம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உயர்கல்வித் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. யுஜிசி விதிகளின்படி துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் செல்லாது என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் பல்கலைக்கழக விதிகளின் அடிப்படையில் பட்டமளிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கையெழுத்து செல்லாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பட்டமளிப்பு விழாவிற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டததால் திட்டமிட்டபடி நாளை காலை பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.