போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகைகளை வழங்க மதுரை கோர்ட் உத்தரவு!
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகைகளை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்துத்துக்கான ஓய்வூதியத் தொகை வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்கள், பேருந்து பணிமனைகள் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் நான்கு நாட்களாக அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஓய்வூதியருக்கான பணப் பயன்களை உடனடியாக வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் 12-ஆவது ஊதியக் குழு அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட ஊதியம் வழங்கவும் போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை மாதந்தோறும் உடனடியாக வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் மாதந்தோறும் அவர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கானது ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.