பேரவையில் ஜெ.படம்: சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது... கைவிரித்தது ஹைகோர்ட்
பேரவையில் ஜெயலலிதா படம் நிறுவியது தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: பேரவையில் ஜெயலலிதா படம் நிறுவியது தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டதால் அவரது படத்தை வைக்கக் கூடாது என்று திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த எதிர்ப்பையும் மீறி அவரது படத்தை சபாநாயகர் திறந்து வைத்தார். இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கானது இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெயலலிதாவின் படத்தை திறப்பது என்ற சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கில் தனி நபர் உரிமை பாதிக்கப்பட்டதால் தலையிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும் பேரவையில் ஜெயலலிதா படம் வைப்பது தொடர்பான வழக்கு, ஜெயலலிதா பெயரில் திட்டங்கள் செயல்படுத்தி வருவது உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வரும் மார்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.