சொத்து வழக்கு.. மாஜி அமைச்சர் அரங்கநாயகத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1991-96-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவரது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கானது சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோமதி நாயகம் முன்பு கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்துக்கு அதிகமாக அரங்கநாயகம் சொத்து சேர்த்தது ஊர்ஜிதமானதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் இருந்து அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சுமார் 21 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியான நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரங்கநாயகம் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கானது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.