புதுவையில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் : சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு
புதுவையில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Recommended Video
சென்னை: புதுவை துணைநிலை ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுவை சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் அரசு நிர்வாகத்துக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க 3 பேரை நியமன உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளலாம்.
இதுவரை நியமன உறுப்பினர்களை மாநில அரசு பரிந்துரை செய்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது.
நியமனம் இல்லை
முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக ரீதியில் ஆளுநர் தலையிடுவதாக மோதல்கள் நீடித்தன. இதனால் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படவில்லை.
மத்திய அரசு பரிந்துரை
இந்நிலையில் பாஜகவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு பரிசீலனை செய்து வந்தது. இதற்கு முதல்வர் நாராயணசாமி ஏற்கவில்லை.
அனுமதி இல்லை
இதனால் மேற்கண்ட மூவரையும் புதுவைக்கு நியமன எம்எல்ஏக்களாக துணை நில் ஆளுநர் கிரண் பேடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவசரகோலத்தில் நியமனம் செய்தார். இந்த நியமனம் அரசியல் சட்டபடியும் புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின் படியும் இல்லை என்று கூறி அவர்கள் 3 பேரையும் சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் கு.வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் எம்எல்ஏவும் வழக்கு
இதை எதிர்த்து 3 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் கிரண் பேடி நியமனம் செய்த 3 எம்எல்ஏக்களின் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனும் வழக்கு தொடர்ந்தார்.
நியமனம் செல்லும்
இந்த வழக்குகள் இன்றைய தினம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த 3 பேரின் நியமனம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.