ஸ்ஸ்ஸ்ஸப்பா என்னா வெயிலு... சென்னையில பிச்சுகிட்டு போகும் நுங்கு, இளநீர் விற்பனை!
சென்னையில் வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க உடலுக்கு குளிர்ச்சியூட்டும் இளநீர், நுங்கு உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகம் நாடி வருகின்றனர்.
சென்னை : சென்னை நகரம் பகல்வேளையில் கடும் வெயிலின் தாக்கத்தால் நரகமாக மாறி வருகிறது. சுள்ளென்று மண்டையை பிளக்கும் வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்சியூட்டும் இயற்கைப் பொருட்களை மக்கள் அதிகம் நாடுவதால் இளநீர், நுங்கு உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் போட்டு தாக்கி வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் அக்னி நட்சத்திரம் 28ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் கழிவிடை நாள் என்று சொல்வது போல கடைசி வாரமான இந்த வாரம் சென்னையில் கடுமையான வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
பகல் வேளையில் கானல் நீரை போர்த்தி தார் சாலைகளில் தகிக்கும் வெயில் வாகன ஓட்டிகளின் முகத்தில் நெருப்பை வாரி வீசுகிறது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க சென்னை மக்கள் இயற்கைப் பொருட்களான இளநீர், நுங்கு, பதநீர் உள்ளிட்டவற்றை அதிகம் நாடுகின்றனர். உடல் சூட்டை தணிக்கும் இந்த பொருட்களுக்கு இருக்கும் மவுசு காரணமாக சென்னை நகர சாலையோரங்களில் புதுப்புது கடைகள் முளைத்திருக்கின்றன.
மொய்க்கும் மக்கள்
சென்னையின் பிரதான பகுதிகளான மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம், கீழ்ப்பாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் முளைத்திருக்கும் கடைகளில் மக்கள் ஈக்களென மொய்த்து உடல் சூட்டை தணிக்கும் பொருட்களை வாங்கி ருசித்து செல்கின்றனர்.
கிடுகிடு விலை
கடந்த ஆண்டு ஒரு டஜன் நுங்கு ரூ.30க்கு விற்கப்பட்ட நிலையில், புயல், வறட்சி காரணமாக விளைச்சல் இல்லாத காரணத்தாலும் மரம் ஏற ஆட்கள் கிடைக்காததாலும் இந்த ஆண்டு நுங்கு விலை ரூ.50க்கும், இளநீரின் அடிப்படை விலையே ரூ. 35 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பதநீர்
இதே போன்று கிராமங்களில் ரசித்து ருசித்த பதநீர் விற்பனையும் சென்னையில் பட்டைய கிளப்புது. மாதவரம் பகுதியில் உள்ள பனைமரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர் 250 மில்லி ரூ. 15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குட்பை டூ கூல்டிரிங்ஸ்
எனினும் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு குட்பை சொன்ன சென்னை நகரத்து வாசிகளின் கவனம் இயற்கை பக்கம் திரும்பியிருப்பதால் எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை என்று பதநீர், இளநீர் உள்ளிட்டவற்றை வாங்கி ஒரு மடக்கு குடித்து விட்டு ஜில்லென்ற சந்தோஷத்துடன் புறப்பட்டு செல்கின்றனர்.