திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண 2500 பேருக்கு மட்டுமே அனுமதி : உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண 2500 பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றுவதைக் காண முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது, பக்தர்கள் மலை மேல் ஏறி அதைக் காண மாவட்ட ஆட்சியர் கடந்த 7ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சக்திவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நேற்று விசாரணை வந்த இவ்வழக்கில், ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆண்டுதோறும் மகாதீபத்தைக் காண மலைக்கு வரும் பக்தர்கள் போட்டுச் செல்லும் குப்பைகளால் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
இதை எதிர்த்து வாதாடிய எதிர்மனுதாரர் வழக்கறிஞர், கார்த்திகை தீபத்தன்று மலைக்குச் சென்று வழிபடுவது மக்களின் நம்பிக்கை. இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குறைந்த அளவில் பக்தர்களை மலை மேல் அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க ஒரு நாள் கால அவகாசம் கொடுத்தார்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குறைந்த அளவில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துக்கொண்டது.இதனையடுத்து, 2500 பக்தர்களுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்,முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும், பக்தர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை மலைமீது வீசாமல் திரும்ப கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.